திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் கிருத்திகை, பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று, பவுர்ணமியை ஒட்டி கோவிலுக்கு, காலை முதலே பக்தர்கள் வர ஆரம்பித்தனர். அதேபோல், இதன் துணை கோவிலான பிரணவமலையில் அமைந்துள்ள பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவிலிலும், சிறப்பு வழிபாடு நடந்தது. கண்ணகப்பட்டு சிதம்பர சுவாமிகள் மடத்திலும் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர். செம்பாக்கம் பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்ததை தொடர்ந்து, உட்பிரகார உலா நடந்தது. நெல்லிக்குப்பம், வேண்டவராசி அம்மன் கோவில், தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில், செங்கண்மாலில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவருக்கு தைலகாப்பு ஸ்தலசயன பெருமாளிற்கு சிறப்பு நாளாக கருதப்படும் கார்த்திகை பவுர்ணமி நாளான நேற்று, நன்மை வேண்டி கோவிலில், மாலை அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. பின், மகாலட்சுமி ஆவாஹணம் செய்து, சுவாமியருக்கு வழிபாடு நடத்தி, கோவில் முன்புறத்தில் உருவாக்கிய தீபஸ்தம்பத்தில் தீபமேற்றி, சொக்கப்பனை தீயிடப்பட்டது. இரவு, மூலவர் சுவாமிக்கு தைலகாப்பு சாற்றப்பட்டது. திருமங்கையாழ்வார் சாற்றுமுறை கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளில், திருமங்கையாழ்வார் அவதரித்தார். நேற்று இந்நாளை முன்னிட்டு ஸ்தலசயனர், தேவியர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு, சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடத்தி, திருப்பாவை, திருவாய்மொழி சேவையாற்றினர். சுவாமியர் வீதியுலா சென்று, திருமங்கையாழ்வாருக்கு ஸ்தலசயனர் பரிவட்ட மரியாதை அளித்தார். இதை, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். திருவிடந்தை திருவிடந்தையில் உள்ள பிரசித்தி பெற்ற நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், சுவாமியர் சன்னிதிகளில் கார்த்திகை தீபம் ஏற்றி, 16 கால் மண்டப பகுதியில் சொக்கப்பனை தீயிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு, மூலவர் சுவாமிக்கு தைலகாப்பு சாற்றப்பட்டது. அதேபோல திருக்கழுக்குன்றத்தில் நேற்று முன்தினம், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இரவு சொக்கப்பனை தீயிடப்பட்டது. நேற்று, பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.