மெட்ரோ பயணியர் எண்ணிக்கை ஆக., மாதம் 4.59 லட்சம் சரிவு
சென்னை, சென்னையில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை, கடந்த மாதம் 4.59 லட்சமாக குறைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்போரின் தவிர்க்க முடியாத போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில் உள்ளது. தினசரி அலுவலகம், கல்லுாரி, மருத்துவமனை செல்வோர், துரிதமான சேவைக்காக மெட்ரோ ரயில் சேவையை நம்பியுள்ளனர். இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, கடந்த ஆக., மாதம் 4.59 லட்சம் குறைந்துள்ளது. அதிகபட்சமாக கடந்த ஜூலையில், 1.03 கோடியாக இருந்த பயணியர் எண்ணிக்கை, கடந்த மாதம் 99.09 லட்சமாக குறைந்துள்ளது. அதாவது, ஒரே மாதத்தில், பயணியர் எண்ணிக்கை 4.59 லட்சம் குறைந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரியில், 86.99 லட்சமாக இருந்த பயணியர் எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, கடந்த ஜூலையில் 1.03 கோடியாக இருந்தது. இது கடந்த மாதம், 99.09 லட்சமாக குறைந்திருப்பது, மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சிங்கார சென்னை அட்டை, க்யூ.ஆர்., குறியீடு, வாட்ஸாப் டிக்கெட், பே.டி.எம்., போன் பே உள்ளிட்ட டிஜிட்டல் முறை பயனாளர்களுக்கு, 20 சதவீதம் தள்ளுபடி வழங்கியும், பயணியர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.