| ADDED : டிச 01, 2025 03:53 AM
மறைமலை நகர்: செங்கல்பட்டு அருகே ஒரக்காட்பேட்டை பாலாற்று மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பழத்தோட்டம் பகுதியில் பாலாற்று நடுவே மேம்பாலம் 2017ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் வழியாக ஒரக்காட்பேட்டை, மாம்பாக்கம், சாலவாக்கம், காவாந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மேம்பாலம் காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் பாலமாக உள்ளது. இந்த பாலம் வழியாக செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அடிப்படை தேவைகளுக்கு சென்று வருகின்றனர். இந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த மேம்பாலம் வழியாக தனியார் தொழிற் சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், மண் லாரிகள் மற்றும் விவசாய இடுபொருள் வாங்க செங்கல்பட்டு சென்று வருகிறோம். விவசாயிகள் செங்கல்பட்டு மார்க்கெட்டிற்க்கு இருசக்கர வாகனங்களில் காய்கறிகளை எடுத்து சென்று வருகின்றனர். இந்த மேம்பாலத்தில் விளக்குகள் இல்லாததால் விபத்துக்கள் நடந்து வருகின்றன. இந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.