| ADDED : மார் 19, 2024 10:01 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேல்மணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண், 34. ரயில்வே ஊழியராக உள்ளார்.இவருக்கு, திருமணமாகி அபிநயா, 28, என்ற மனைவியும், இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். அருணுக்கு மது பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி, அருண் குடித்து விட்டு வீட்டிற்கு வரவே, தம்பதியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் மனமுடைந்த அபிநயா, வீட்டில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அருகில் அடுப்பில் இருந்த நெருப்பு அபிநயா மீது பட்டு தீ பரவியது.அருண் மற்றும் உறவினர்கள் அபிநயாவை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சம்பவம் காரணமாக மன உளைச்சலில் இருந்த அருண், நேற்று முன்தினம் திம்மாவாரம் பகுதியில் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்தார்.பொதுமக்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அருண் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.