| ADDED : மே 09, 2024 12:12 AM
சென்னை, சென்னையை சேர்ந்த 36 வயது நபர், ஒரு நிமிடத்திற்கு 200க்கும் மேல் என, சீரற்ற இதய துடிப்பால் பாதிக்கப்பட்டார். நீண்ட காலமாக இப்பிரச்னையால் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டுள்ளது.ரத்தக் குழாய் வாயிலாக அளிக்கப்பட்ட மருந்துகளாலும் பயனில்லை. நோயாளியின் மார்பகத்தில் மின் அதிர்ச்சி அளித்து, சரியான அளவில் இதய துடிப்பை செயல்பட வைக்க, 'பேஸ் மேக்கர்' என்ற வெளி 'டிபிரிலேட்டர்' வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்பட்டது.பின், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில், அவரது இதயத்தின் வலது கீழ் அறையில் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது தெரிந்தது.பின், விலை உயர்ந்த நவீன 'பேஸ் மேக்கர்' கருவியை பொருத்த முடிவு செய்யப்பட்டது.மருத்துவமனையின் இதய நலத்துறை தலைவரும், இயக்குனருமான எஸ்.தணிகாசலம் தலைமையில் டாக்டர்கள் வினோத்குமார், ப்ரிதம் கிருஷ்ணமூர்த்தி அடங்கிய குழுவினர், பேஸ் மேக்கர் கருவியை பொருத்தினர்.இதுகுறித்து, டாக்டர் தணிகாசலம் கூறுகையில்,''ஏழை நோயாளியான அவரால், 6 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, நவீன பேஸ் மேக்கர் கருவி பொருத்திக்கொள்ள வசதி இல்லாததால், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்,'' என்றார்.