திருவள்ளூர்:திருவள்ளூர் தனி தொகுதியில், கடந்த 2019ல் தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளராக ஜெயகுமார் போட்டியிட்டார். மொத்தம் 7,67,292 ஓட்டுகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் வேணுகோபாலை, 3,56,955 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியடைந்த அவருக்கு, இந்த தேர்தலில் நிற்க சீட்டு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்தார்.ஆனால், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சசிகாந்த் செந்திலுக்கு சீட்டு வழங்கப்படுவதாக, நேற்று முன்தினம் இரவு, காங்., பட்டியல் வெளியிட்டது. இதனால், எம்.பி., ஜெயகுமார் 'அப்செட்' ஆகியுள்ளார்.எம்.பி., ஜெயகுமாருக்கு சீட் கிடைக்காதது குறித்து, அக்கட்சியினர் கூறியதாவது:கடந்த 2019 தேர்தல் முடிந்த சில மாதங்களில் திருவள்ளூர் மருத்துவக் கல்லுாரிக்கு மத்திய அரசு அனுமதியளித்து நிதி ஒதுக்கீடு செய்தது.மருத்துவக் கல்லுாரி கட்டி முடித்து, திறப்பு விழா நடந்த சமயத்தில், தான் எடுத்த முயற்சியினாலே மருத்துவக்கல்லுாரி வந்தது என, பக்கம் பக்கமாக 'நோட்டீஸ்' அடித்து, அனைவருக்கும் கொடுத்தார். அதை, தி.மு.க., நிர்வாகிகள் விரும்பவில்லை.தவிர, தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளை அனுசரித்து செல்லவில்லை. பொதுமக்களையும் அவர் சந்திக்காதது, தொகுதி முழுதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.தேர்தலுக்கு முன், ஆளுங்கட்சி சர்வே நடத்தியதில், எம்.பி., ஜெயகுமாரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என, உளவுத்துறை அறிக்கை தந்தது.இதனால், ஜெயகுமாரே மீண்டும் நிற்பதாக இருந்தால் காங்., கட்சிக்கு சீட்டு கிடையாது என, தி.மு.க., கறாராக தெரிவித்தது.இதற்கிடையே, கர்நாடகா மாநிலத்தில், காங்., மீண்டும் ஆட்சிக்கு வர, தற்போது சீட்டு வழங்கப்பட்டுள்ள சசிகாந்த் செந்தில் பல்வேறு ஆலோசனை தெரிவித்தார்.அதற்கு நன்றி செலுத்தும் விதமாகவும், ராகுலின் நண்பர் என்பதாலும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., சசிகாந்த் செந்திலுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.