சென்னை, வேளச்சேரி, குருநானக் கல்லுாரி சார்பில் 10ம் ஆண்டு பவித் சிங் நாயர் நினைவு கோப்பைக்கான, அகில இந்திய 'டி - 20' கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடக்கின்றன. ஆண்களில் 16, பெண்களில் 10 என, 26 அணிகள் பங்கேற்றன.இதில், ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டி, வேளச்சேரி கல்லுாரி மைதானத்தில், நேற்று நடந்தது. முதல் அரையிறுதியில், ஆர்.கே.எம்., விவேகானந்தா மற்றும் ஈரோடு கொங்கு கல்லுாரிகள் மோதின. டாஸ் வென்ற ஈரோடு கொங்கு கல்லுாரி அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து, களமிறங்கிய ஆர்.கே.எம்., விவேகானந்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை அடித்தது.இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய கொங்கு கல்லுாரி அணியினர், 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை அடித்து வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.மற்றொரு அரையிறுதியில், குருநானக் 'ஏ' மற்றும் பச்சையப்பா கல்லுாரி அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த குருநானக் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு, 183 ரன்களை குவித்தது. கடினமான இலக்குடன் பச்சையப்பா கல்லுாரி அணியினர் அடுத்து களமிறங்கினர்.ஆனால், குருநானக் கல்லுாரி அணியினரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். முடிவில், 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 66 ரன்களில் ஆட்டமிழந்தது.இதனால், 117 ரன்கள் வித்தியாசத்தில் குருநானக் அணி அபார வெற்றி பெற்றது. இன்று நடக்க உள்ள இறுதிப்போட்டியில், குருநானக் மற்றும் ஈரோடு கொங்கு கல்லுாரி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.