சென்னை, வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், 2,236 கோடி ரூபாய் மதிப்பிலான 100 திட்டங்களுக்கான பணிகள் துவங்கியுள்ளதாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் சீரான மற்றும் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, மூன்று ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாயில் வடசென்னை வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டது. சி.எம்.டி.ஏ., நிதியை பயன்படுத்தி இத்திட்டம் செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டது. வடசென்னையில் மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார ஆய்வு அடிப்படையில், எந்தெந்த பகுதிக்கு என்ன தேவை என்ற அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த ஆய்வுப் பணிகள், 2023 செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் அடிப்படையில், 4,181.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 219 திட்டங்கள் இறுதி செய்யப்பட்டன. முதற்கட்டமாக, 11 துறைகள் சம்பந்தப்பட்ட 87 திட்டப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்தார். தற்போதைய நிலவரப்படி, 2,236.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 திட்டங்களுக்கான பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன. மீதமுள்ள திட்டங்கள், 2,141.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் துவங்கப்பட்டு, 2025க்குள் முடிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வடசென்னையில் துவங்கப்பட்டுள்ள 12 திட்டப் பணிகள் குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 12 திட்டங்களும், எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரையின் அடிப்படையில், 2023 - 24 மானிய கோரிக்கையின் போது துறை அமைச்சரால் தனித்தனியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள். சென்னை பெருநகரில், 16 சட்டசபை தொகுதிகளில், எம்.எல்.ஏ.,க்களின் பரிந்துரையின்படி, 234 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டது.