சென்னை: செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கான அவகாசத்தை, டிச., 7 வரை, சென்னை மாநகராட்சி நீட்டித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னையில் தெருநாய்கள், நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை தடுக்க, 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயம். இதற்கான பணிகள், மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களில், அக்., 8 முதல் இலவசமாக செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை, 65,422 செல்லப்பிராணிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, 24,477 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் தரப்பட்டுள்ளது. நவ., 23க்குள் உரிமம் பெறாவிட்டால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த அவகாசம், டிச., 7 வரை, 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லுார் ஆகிய இடங்களில் உள்ள செல்லப்பிராணிகள் சிகிச்சை, இன கட்டுப்பாட்டு மையங்களில், தடுப்பூசி செலுத்துல் உள்ளிட்ட சேவைகளை பெறலாம். ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை சேவை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.