| ADDED : ஜன 03, 2024 12:30 AM
சென்னை, முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அறநிலையத்துறை சென்னை, புறநகர் கோவில்கள் பள்ளியில் நடத்தப்பட்ட போட்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னை கீழ்ப்பாக்கம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது. இதில், அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.பின், அமைச்சர் கூறியதாவது:இந்த ஆட்சியில் கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு 37.13 கோடி ரூபாயில் 92 பணிகளும், கல்லுாரிகளுக்கு 41.53 கோடி ரூபாயில் 34 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 28 பணிகள் முடிவுற்றுள்ளன.கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முதல் நாள் 10,000த்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி உள்ளனர். அங்கு, 360 அரசு விரைவுப் பேருந்துகள், 1,110 அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், 840 ஆம்னி பேருந்துகள் என, 2,310 பேருந்துகள் தினசரி வந்து செல்லுகின்ற அளவிற்கு முழுமையாக இயக்கப்படும்.பெங்களூர் போன்ற வெளிமாநிலங்களுக்கு செல்லும் 30 சதவீத பேருந்துகள் இன்னும் ஓராண்டுக்கு கோயம்பேடில் இருந்து இயக்கப்படும். பின், கோயம்பேடு பேருந்து நிலையம், அதனையொட்டி சி.எம்.டி.ஏ., விற்கு உள்ள, 16 ஏக்கர் இடத்தையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன், கூடுதல் கமிஷனர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.