சென்னை: போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து, அரசிடம் இருந்து, 16 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற நபரை போலீசார், கைது செய்தனர். ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவகணேசன், 38. இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது: நான் 'ஆர்.எம்.சி., டிரேடர்ஸ்' நிறுவனத்தின் பங்குதாரர். நீலாங்கரையில் நிறுவனம் சார்பாக, 60 ஏக்கரில் மனைப்பிரிவு போடப்பட்டுள்ளது. அந்த மனையின் முன் பகுதியில், 1,050 சதுர அடி இடத்தை, சாலை விரிவாக்கத்திற்கு என, நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. இந்நிலையில், நடராஜன் என்பவர், போலியான ஆவணம் மூலம், அந்த இடத்தை அரசுக்கு ஒப்படைப்பு செய்ததாக, நீலாங்கரை பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கு ஈடாக அரசு ஒதுக்கீடு செய்த இழப்பீட்டு தொகை 16 கோடி ரூபாயை, சட்டவிரோதமாக பெற்று மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த நடராஜன், 55 என்பவர், போலி ஆவணங்கள் வாயிலாக ஆள்மாறாட்டம் செய்து, இடத்தை பதிவு செய்து, அரசிடம் இருந்து இழப்பீட்டு தொகையாக, 16 கோடி பெற்று மோசடி செய்தது தெரிந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.