அம்பத்துார்: திருமணமான 11 மாதங்களில், பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆர்.டி.ஓ., விசாரணை முடிவில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் கைது செய்யப்பட்டார். அம்பத்துார் தொழிற்பேட்டை அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹசாருதீன், 31. இவரும், ஹுருல் சமீரா, 29, என்பவரும், பல ஆண்டுகளாக காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். மருத்துவர்களான இருவரும், அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர். இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி, ஹுருல் சமீரா, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹுருல் சமீராவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்படி, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரித்தனர். ஆனால், திருமணமான 11 மாதங்களில் ஹுருல் சமீரா இறந்ததால், இந்த வழக்கு ஆர்.டி.ஓ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதில், ஹசாருதீன் வரதட்சணை கேட்டு சண்டையிட்டதாலும், ஹுருல் சமீராவின் நடத்தையில் சந்தேகப்பட்டதாலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., விசாரணை அறிக்கையின்படி, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, ஹசாருதீனை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.