| ADDED : ஜூன் 17, 2024 10:53 PM
சூலூர்:சுல்தான்பேட்டை வட்டாரத்தில், 220 எக்டரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.இதுகுறித்து சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:சிறு, குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், சுல்தான்பேட்டை வட்டாரத்தில், 220 எக்டரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சொட்டு நீர் பாசனத்தால், தண்ணீர் ஆவியாவது தடுக்கப்பட்டு, சேமிக்கப்படுகிறது. இதனால், நல்ல மகசூலும், லாபமும் கிடைக்கும். ஆர்வமுள்ள விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகம் மற்றும் தங்கள் பகுதி தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்களை அணுகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.