உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜமாபந்தி மனுக்களுக்கு தீர்வு காண அறிவுரை; சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை

ஜமாபந்தி மனுக்களுக்கு தீர்வு காண அறிவுரை; சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை

பொள்ளாச்சி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் மொத்தம், 1,078 மனுக்கள் பெறப்பட்டன.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களில், 20ம் தேதி ஜமாபந்தி துவங்கியது. வால்பாறையில் ஒரு நாளும், கிணத்துக்கடவில் மூன்று நாட்களும் நடந்தது.பொள்ளாச்சி தாலுகாவில், ஜமாபந்தி அலுவலரான, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் தலைமையில் நடந்தது. தாசில்தார் ஜெயசித்ரா, மண்டல துணை தாசில்தார் பட்டுராஜா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். கோலார்பட்டி உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேற்று ஜமாபந்தி நடந்தது. மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.அதில், பட்டா மாறுதல் - 23, இலவச வீட்டுமனை பட்டா கோருதல் - 118, நத்தம் பட்டா மாறுதல் - 25, நில அளவை - 15, கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - 52 உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் என மொத்தம், 280 மனுக்கள் வரப்பெற்றன.கடைசி நாளான நேற்று பட்டா மாறுதல் - 18, பட்டா நகல் - 1, புதிய ரேஷன் கார்டு - 10, இ-பட்டா, 21 பேர், என மொத்தம், 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஐந்து உள்வட்டங்களுக்கு நடந்த ஜமாபந்தியில் மொத்தம், 1,078 மனுக்கள் பெறப்பட்டன. அதிகாரிகள் கூறுகையில், ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களில், உடனடி தீர்வு போக மற்ற மனுக்கள், அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவாக தீர்வு காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனு மீதான நடவடிக்கை குறித்து, மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். வில்லங்கம், கோர்ட் நடவடிக்கை இல்லாத மனுக்களுக்கு தீர்வு காணப்படும்,' என்றனர்.

உடுமலை

உடுமலை தாலுகாவில், பெதப்பம்பட்டி உள்வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று நடந்தது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.இதில், இலவச வீட்டு மனை பட்டா கோரி -- 470 பேரும், பட்டா மாறுதல் - 55, மகளிர் உரிமை தொகை - 55, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி - 8 உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 664 மனுக்கள் பெறப்பட்டது.உடுமலை தாலுகாவில், நேற்றுடன் ஜமாபந்தி நிறைவடைந்தது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவில் நிலம் மீட்கணும்!

சிஞ்சுவாடி பகுதி மக்கள் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி மாரியம்மன் கோவிலுக்கு ஜமீன்தார் பாளையப்பட்டு ஜம்ப நாயக்கரால், கோவில் பராமரிப்புக்காக, 27 ஏக்கர், 90 சென்ட் நிலங்கள் வழங்கப்பட்டன. இவை பூஜாரி பொறுப்பில் தேவதாயம் செய்து கொடுக்கப்பட்டது.ஒரு ஏக்கர், 56 சென்ட் நிலம் மட்டும் கோவில் பெயரில் இருந்து வருகிறது. சில நபர்களால் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தவறான முறையில் நடந்த பத்திர பதிவை ரத்து செய்து, மீண்டும் கோவில் பெயருக்கு பட்டா மாற்றித்தர வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.- நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை