பொள்ளாச்சி : கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட, 'தானியங்கி வேளாண் வானிலை சேவைக்கான செயலி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த 2018ம் ஆண்டு, தானியங்கி வேளாண் சார்ந்த ஆலோசனை செயலி உருவாக்கப்பட்டது. 2022 வரை பயன்பாட்டில் இருந்த நிலையில், செயலியை மேம்படுத்தும் பணி துவங்கப்பட்டு, தற்போது, 'தானியங்கி வேளாண் வானிலை சேவைக்கான செயலி' அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்காக, கூகுள் பிளே ஸ்டோரில், tnau aas என 'டைப்' செய்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள, 'தானியங்கி வேளாண் வானிலை சேவை' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, ஆண்ட்ராய்டு மொபைலில் நிறுவலாம்.செயலியை செயல்படுத்தியவுடன், மேல்புற வலது மூலையில் காணப்படும் மூன்று கோடுகளை தொட்டால் கிடைக்கும் தொகுப்பில், 'பதிவு செய்ய' என்ற வார்த்தையை 'கிளிக்' செய்து, தங்கள் சுய விபரம் மற்றும் கடவுச் சொல்லை பதிவிட வேண்டும்.முக்கியமாக, தங்களின் பெயர், தந்தை பெயர், மாநிலம், மாவட்டம், வட்டாரம், மொபைல்போன் எண் மற்றும் 8 இலக்க கடவுச்சொல் ஆகிய, 7 விபரங்களை மட்டும் பதிவிட்டால் போதும். ஏனைய விபரங்கள் தேவையில்லை. பயிர் விதைப்பு தேதி
பதிவு செய்த மொபைல்போன் எண்ணையும், கடவுச் சொல்லையும் உபயோகப்படுத்தி செயலிக்குள் நுழைய வேண்டும். அங்கு, தாங்கள் பயிரிட்டுள்ள அல்லது ஓரிரு வாரங்களுக்குள் பயிரிடப் போகும் பயிரையும், விதைப்பு தேதியையும் பதிவிட வேண்டும்.அதன் வாயிலாக, தங்கள் பயிருக்கு தேவையான வானிலை சார்ந்த ஆலோசனைகள், வாரத்துக்கு ஒன்று அல்லது இருமுறை இந்த செயலியில் கிடைக்கும். ஒரு விவசாயி எத்தனை பயிர் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். பதிவு செய்துள்ள பயிர்களை தொட்டவுடன், அதற்குரிய ஆலோசனைகளை காணலாம். விவசாயிகளுக்கு தடையில்லாமல், தங்கள் கிராமத்தின் வானிலை சார்ந்த விபரங்களும், தேவையான விபரங்களும், உடனடியாக கிடைப்பதற்காக உருவாக்கியுள்ள இந்த செயலியை பயன்படுத்தி, வானிலை இடர்பாடுகளை தவிர்க்கலாம்.தங்கள் கிராமத்தின் வானிலை சார்ந்த விபரங்களுக்கு, மேல் இடதுபுறம் உள்ள மூன்று பட்டைகளை தொட வேண்டும். இதனால் தெரியும் தொகுப்பில், 'வானிலை' என்பதை அழுத்தி, தங்களின் மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுத்தால், கடந்த வார வானிலையும் மற்றும் எதிர்வரும் வானிலையும், அட்டவணையில் தெரியும்.
செயலியில் என்னென்ன வசதிகள்?
மேம்படுத்துவதற்கு முன் இருந்த செயலியில், ஒரு நேரத்தில், ஒரு பயிர் விபரத்தை மட்டுமே அறிந்துக் கொள்ளும் வகையில் பதிவு செய்ய முடியும். தற்போது மேம்படுத்தப்பட்ட செயலியில், எத்தனை பயிர் விபரத்தையும் அறிந்து கொள்ள முடியும்.நடைமுறையில் உள்ள பூச்சிக்கொல்லி குறித்த விபரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பு, வேளாண் சார்ந்த ஆலோசனை மட்டும் இருந்தது. தற்போது, உழவில்துவங்கி, அறுவடை வரை பொதுவான வேளாண் தகவல்கள் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியை உபயோகப்படுத்துவதில், ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 94439 35107 அல்லது 94861 86076 ஆகிய எண்களில் அழைக்கலாம்.அல்லது வாட்ஸ் ஆப்பில் தெரிவித்து தெளிவு பெறலாம்.அதே போல், ஏதேனும் தவறான தகவல் பெறப்பட்டால், உடனடியாக இந்த எண்களில் தெரிவித்து செயலியை மேம்படுத்த உதவலாம் என, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் பயிர் மேலாண்மை இயக்ககம் சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.