பொள்ளாச்சி:மா, வாழை உள்ளிட்ட காய்களை பழுக்க வைக்க 'எத்திபான்' ரசாயணம் பயன்படுத்தக்கூடாது என, உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர்.பழங்களும், காய்கறிகளும் அதிக சத்துள்ளவை. இவை குறுகிய காலத்தில் கெட்டு விடுகின்றன. ஆனால், பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட நாள் வைத்திருக்கவும், காய்களை விரைந்து பழுக்க வைக்கவும், பருமனை அதிகரிக்கவும், ரசாயணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக, கால்சியம் கார்பைடு, எத்திபான், ஆக்சிடாசின் போன்ற ரசாயணப் பொருட்களே, அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், இத்தகைய ரசாயணம் பயன்படுத்தப்பட்டு பழுக்க வைத்த பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுகிறது.இதனால், பழங்களின் இனிப்புச்சுவை குறைந்து, நீண்ட நாட்கள் ஆனாலும் அழுகாமல் இருப்பது, மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், 'காய்களை பழுக்க வைக்க, 'எத்திபான்' பயன்படுத்தக் கூடாது', என, உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர்.உணவு பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், 'மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் உத்தரவுப்படி, காய்களை பழுக்க வைக்க எத்திபான் பயன்படுத்தக்கூடாது. விவசாயிகள், குடோன் உரிமையாளர்கள், மார்க்கெட் கமிட்டியினர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளும் இதனை பின்பற்ற வேண்டும்,' என்றனர்.