| ADDED : ஆக 04, 2024 11:05 PM
கோவை : முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 3.5 லட்சம் வேப்பங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.இதுதொடர்பாக, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை:விவசாயத்தில், ஒரே பயிரைத் திரும்பத் திரும்ப சாகுபடிசெய்வதாலும், ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதாலும், மண் வளம் குறைந்தும், மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படுகிறது.வேப்ப இலை நல்ல பசுந்தாள் உரமாக செயல்படுகிறது. ஆசாடிராக்டின் மூலப்பொருளைக் கொண்ட வேப்ப எண்ணெயைத் தெளித்து, பூச்சி, நோய்த் தாக்குதல்களில் இருந்து பயிர்களைக் காக்கலாம்.எனவே, வேப்ப மரங்களைப் பரவலாக்க, கோவை மாவட்டத்துக்கு 3.5 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு எக்டரில் அடர் நடவு முறையில், வேப்பங்கன்றுகளைப் பயிரிட 200 கன்றுகள் தேவை. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 5 ஏக்கர் வரை வேப்பங்கன்று வழங்கப்படும்.இது குறித்த மேலும் தகவலுக்கு உழவன் செயலி வாயிலாகவோ, அல்லது அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அணுகலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.