வால்பாறை : வால்பாறையில் பெய்யும் மழையால், அணைகளுக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்கிறது. கடந்த வாரம் இடைவிடாமல் பெய்த கனமழையினால், பரம்பிக்குளம் பாசனத்திட்டதின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறு அணை நிரம்பியது.இதனை தொடர்ந்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது.மழை நீடிக்கும் நிலையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.07 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,052 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது.அணையிலிருந்து வினாடிக்கு, 2,174 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம்அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.இதனால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 41.55 அடியாக உயர்ந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):வால்பாறை - 21, சோலையாறு - 20, பரம்பிக்குளம் - 12, ஆழியாறு - 15, மேல்நீராறு - 49, கீழ்நிராறு - 25, காடம்பாறை - 13, மேல்ஆழியாறு - 5, நவமலை - 6, சர்க்கார்பதி - 20, வேட்டைக்காரன்புதுார் - 12, மணக்கடவு - 12, துணக்கடவு - 8, பெருவாரிப்பள்ளம் - 5, பொள்ளாச்சி - 14 என்ற அளவில் மழை பெய்தது.