- நமது நிருபர் -பள்ளி கல்வித்துறை சார்பில், குறுமைய விளையாட்டு போட்டிகளை ஏழு குறுமையங்களில் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நடந்தது.நடப்பாண்டு குறுமைய போட்டியை முன்னின்று, நடத்த போகும் பள்ளிகள், பொறுப்பு விபரம் வெளியிடப்பட்டது. அதன்படி, திருப்பூர் தெற்கு பள்ளிகளுக்கான போட்டியை பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி; திருப்பூர் வடக்கு பகுதி பள்ளிகளுக்கான போட்டியை, 15 வேலம்பாளையம், ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; அவிநாசி குறுமைய போட்டியை, பச்சாபாளையம், எஸ்.கே.எல்., மெட்ரிக் பள்ளி; பல்லடம் குறுமைய போட்டியை, பூமலுார் அரசு உயர்நிலைப்பள்ளி; உடுமலை வட்டார பள்ளிகளுக்கான குறுமைய போட்டியை, உடுக்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி; தாராபுரம் குறுமைய போட்டியை, மூலனுார் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி; காங்கயம் வட்டார பள்ளிகளுக்கான போட்டியை, வெள்ளகோவில், அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி நடத்த உள்ளது. புதிய விளையாட்டு போட்டிகள், முத்துார், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கவுள்ளது.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் பேசுகையில், ''மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு பள்ளியிலும் முதன்மை விளையாட்டுகளில் ஒன்றைக் கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களை கொண்ட, பள்ளி விளையாட்டு குழு உருவாக்கி, மாணவர்களை அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கச் செய்து, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பரிசு பெற ஊக்கப்படுத்த வேண்டும்'' என்றார்.