| ADDED : ஜூன் 23, 2024 11:13 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், தினமும், அதிகப்படியான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.அவ்வாறு, மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, உடன் தங்குபவர்கள் மற்றும் உறவினர்கள், உணவு மற்றும் பழங்களை, பிளாஸ்டிக் கவர்களில் வாங்கிச் செல்கின்றனர். உணவுகளை உண்ட பின், இலை மற்றும் தோல் ஆகியவற்றை, பிளாஸ்டிக் கவர்களில் வைத்து, மருத்துவமனைகளின் வளாகத்துக்கு உள்ளேயே விட்டுச்செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மருத்துவமனையில் துாய்மைப்பணியாளர்கள் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவதும் கிடையாது.தன்னார்வலர்கள் கூறுகையில், 'மருத்துவமனை நுழை வாயில்களில், பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் வாயிலாக, பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய வேண்டும். அவ்வாறு, நடவடிக்கை இருந்தால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியும்,' என்றனர்.