கோவை:இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது குறித்து, போலீஸ் துணை கமிஷனர், மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டியில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராமன் விஹார் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில், 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் குடியிருக்கின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லுாரை சேர்ந்த பிரசாந்த் ரெட்டி என்பவரின் மகன் ஜெயான் ரெட்டி, 6, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த பாலசுந்தர் என்பவரின் மகள் வியோமா பிரியா, 8, உள்பட, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில் அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஜெயான் ரெட்டி, வியோமா பிரியா மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். சிறுமி வியோமா பிரியாவின் தந்தை பாலசுந்தர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார், 174 கீழ் வழக்கு பதிந்து (இயற்கைக்கு மாறான மரணம்) விசாரிக்கின்றனர். வடக்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், குடியிருப்பு வாசிகள் மற்றும் அசோசியேசன் நிர்வாகிகளிடம் விசாரித்தார். குடியிருப்பு வளாக பூங்காவை, வடமதுரை மின்வாரிய உட்கோட்ட செயற்பொறியாளர் சுந்தரம் மற்றும் துணை செயற்பொறியாளர் பாலாஜி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:குடியிருப்போர் நலச்சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே, விபத்து ஏற்பட்டுள்ளது. வளாகத்தில் குழந்தைகள் பூங்காவை புதிதாக கட்டி உள்ளனர். அப்போது பூங்காவின் கீழ் மின் கேபிள் பதித்துள்ளனர். தெருவிளக்கை ஆன் செய்யும் போது, பூங்காவில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பதிவு செய்ய வேண்டும்
குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் கூறியதாவது:சிறுவர் விளையாட்டு பூங்கா கடந்த, 4 மாதங்களுக்கு முன் ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அப்பகுதியில் மின் விளக்கு அமைக்க பூமிக்கு அடியில் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒரு பூங்கா உள்ள நிலையில் அந்த பூங்கா திறக்கப்பட்டது. 400 வீடுகளில், 70 வீடுகளில் தான் கட்டடத்தின் உரிமையாளர்கள் வசித்து வருகின்றனர்.மற்ற வீடுகளில், வாடகைக்குதான் குடியிருக்கிறார்கள். கட்டடத்தில் மின் பழுது உள்ளது சம்மந்தமாக, ஏற்கனவே குடியிருப்பு வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு வந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடியிருப்பு பராமரிப்புக்காக, 1500 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை வசூல் செய்து வருகின்றனர். மின் வயரை பராமரித்து இருந்தால், இரு குழந்தைகள் தப்பியிருப்பர்.இதுபோன்ற நிகழ்வுகளை, போலீசார் சாதாரண விபத்து என்று வழக்கு பதியாமல், சம்மந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.