| ADDED : ஜன 03, 2024 11:55 PM
பொள்ளாச்சி : கோவை மாவட்டத்தில், வரும் ஐந்து நாட்களுக்கு துாறல் மழை மற்றும் வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுவதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.அதன்படி, வரும் ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, 28-29 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 50 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.தொடர்ந்து, வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுவதால் மக்காச்சோளம், பருத்தி, மஞ்சள், மற்றும் மரவள்ளி கிழங்கிற்கு போதிய மண் ஈரத்தினை உறுதி செய்ய வேண்டும்.வளர்பருவ கறிவேப்பிலையில், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் குறைவாக இருப்பதால், கறிவேப்பிலையின் மணம் குறைவாக இருக்கும்; எனவே, பயிரடக்க வானிலையினை மாற்றும் விதத்தில், நீர்பாசனத்தை இரவு நேரத்தில் அளிக்கலாம்.பேசிலஸ் சப்டில்லிஸ் லிட்டருக்கு 5 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும். முன்பருவம் நடவு செய்த மஞ்சள் கிழங்கை, அறுவடை செய்ய இதுவே உகந்த தருணம் என, விவசாயி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.