| ADDED : நவ 20, 2025 02:20 AM
வால்பாறை: அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், வரும் 28ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள், தொழிற்பயிற்சிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ், மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவின் கீழ் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில், கடந்த ஜூன் மாதம் முதல் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. இருப்பினும் மொத்தம் உள்ள, 104 சீட்களுக்கு நேற்று வரை, 68 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனையடுத்து, மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் வகையில், இம்மாதம், 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வால்பாறை அரசினர் தொழில் பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. உயர்கல்வி படிக்க முடியாத மாணவர்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மாணவர்கள் வசதிக்காக வரும், 28ம் தேதி வரை கல்லுாரியில் நேரடி அட்மிஷன் நடக்கிறது. கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அறிக்கையில், தெரிவித்துள்ளார்.