1. வீணாகும் குடிநீர்
உக்கடம், கரும்புக்கடை பகுதியில், ஏ.பி.டி., பெட்ரோல் பங்க் எதிரே சாலையில் கடந்த மூன்று மாதமாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து, பலமுறை புகார் செய்தும் குழாய் உடைப்பை சரிசெய்யவில்லை.- தங்கவேல், உக்கடம். 2. அடிக்கடி விபத்து
மதுக்கரை ரோடு, பிள்ளையார்புரம் பிரிவு முதல் மோகன்நகர் பேருந்து நிறுத்தம் வரை, சாலையில் ஆங்காங்கே குழிகளாக உள்ளது. குழிகளை வெறும் ஜல்லிக்கற்கள் கொண்டு மூடியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.- சிவராமன், பிள்ளையார்புரம். 3. தெருவிளக்கு பழுது
கோணவாய்க்கால்பாளையம், 85வது வார்டு, சுப்பிரமுதலியார் வீதியில், 'எஸ்.பி -19, பி -19' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வெளியில் செல்ல, பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.- முத்துக்குமார், 85வது வார்டு. 4. மிரட்டும் நாய்கள்
பீளமேடுபுதுார், திருமகள் நகரில், பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோரை நாய்கள் கடிப்பது, துரத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர்.- சுந்தர்ராஜ், திருமகள்நகர். 5. தெருவிளக்கு எரியலை
மதுக்கரை ரோடு, அன்னை இந்திரா நகர், மூன்றாவது தெருவில் உள்ள மின்கம்பத்தில், கடந்த ஆறு மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. மின்ஒயருக்கு மேல் தெருவிளக்கு இருப்பதால், விளக்கை மாற்ற முடியாது என, ஒப்பந்த பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு மின்வாரிய அதிகாரிகள், நிரந்தர தீர்வு காண வேண்டும்.- முத்துவாப்பா, அன்னை இந்திரா நகர். 6. கடும் துர்நாற்றம்
குனியமுத்துார், நரசீபுரம் பகுதியில், ஐயப்பா நகர், எட்டாவது வீதியில், பல மாதங்களாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யவில்லை. கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், மெத்தனமாக செயல்படுகின்றனர்.- சக்திவேல், குனியமுத்துார். 7. எப்போ விழுமோ?
பீளமேடுபுதுார், ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே உள்ள மரம் மிகவும் சாய்ந்த நிலையில் வலுவிழந்து உள்ளது. அதிக மக்கள் கூடும் இடம் என்பதால், எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள இந்த மரத்தை, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.- யுவராஜ், பீளமேடுபுதுார். 8. சாலையில் தேங்கும் மழைநீர்
வெள்ளக்கிணறு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி - 2ல் உள்ள தெருவில், மற்ற தெருக்களிலிருந்து வடியும் மழைநீர் தேங்கி நிற்கிறது. பல நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரால், குடியிருப்பு பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.- மணிமாறன், வெள்ளக்கிணறு. 9. சுகாதார சீர்கேடு
கணபதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 'ஏ' பிளாக் குடியிருப்பில், குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டினர். இதில், சாக்கடை கால்வாய் உடைந்து, கழிவுநீர் வெளியேறுகிறது. கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. - சங்கர், கணபதி. 10. ரோடெங்கும் பள்ளம்
கவுண்டம்பாளையம், காந்தி நகர், எச்.எஸ்.மருத்துவமனை அருகே, மாடுகளை மேய்ச்சலுக்கு தெருக்களில் உரிமையாளர்கள் அவிழ்த்து விடுகின்றனர். சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பதுடன், குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.- தங்கவேல், கவுண்டம்பாளையம். 11. விபத்திற்கு முன் சீரமைக்கணும்
சாரதா மில் ரோடு, சுப்ரமணிய கோனார் வீதியில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடவில்லை. பள்ளங்களாக உள்ள சாலையில் வாகனங்களை ஓட்டவும், நடக்கவும் சிரமமாக உள்ளது. விபத்து நடக்கும் முன், சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.- வித்யா, போத்தனுார். வீதியெங்கும் தேங்கும் குப்பை
மேட்டுப்பாயைம், சிக்கதாசம்பாளையம், மகாலட்சுமி அவென்யூ முதல் தெருவில் இருந்த, ஒரு குப்பை தொட்டியையும் அகற்றி விட்டனர். குப்பை சேகரிக்கவும் துாய்மை பணியாளர்கள் முறையாக வருவதில்லை. இதனால், ஆங்காங்கே குப்பை கொட்டப்படுகிறது. இரண்டு வருடங்களாக புகார் செய்தும், பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவில்லை.- ராகேஷ், சிக்கதாசம்பாளையம்.