கோவை:பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலைநேர சிற்றுண்டி வழங்கியதில், கோவை மாநகராட்சி கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் கையெழுத்து பெறாமல், ஒப்பந்ததாரருக்கு ரூ.35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. இவர்களது மாலை நேர பசியை போக்க, சிற்றுண்டி வழங்கப் படுகிறது. இதற்கு, மாநகராட்சி பொது நிதியில் ரூ.94 லட்சம் ஒதுக்கப்பட்டது. இத்திட்டம், ஜன., மாதம் முதல் அமலில் உள்ளது.இதற்கான தொகையை பெற, கல்விப்பிரிவுக்கு ஒப்பந்த நிறுவனத்தினர் பில் சமர்ப்பிக்க வேண்டும். இங்கிருந்து கோப்பு தயாரித்து, துறை ரீதியாக, மாநகராட்சி துணை கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். கோப்புகளை சரிபார்த்து, கமிஷனருக்கு அவர் பரிந்துரைக்க வேண்டும். மாநகராட்சி விதிமுறைக்கு உட்பட்டு, மாலைநேர சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, தொகை வழங்க அறிவுறுத்தி, கையெழுத்திட்டு, கணக்குப் பிரிவுக்கு கமிஷனர் அனுப்புவார். அங்குள்ள அலுவலர்கள், பில் தொகையை சரிபார்த்து பணம் வழங்குவர்.இந்நடைமுறைகளை பின்பற்றாமல், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை கமிஷனர் செல்வசுரபி பார்வைக்கு கோப்புகளை அனுப்பாமல், இரு உயரதிகாரிகளின் கையெழுத்துகளை பெறாமல், குறுக்கு வழியில், கல்விப்பிரிவில் இருந்து கோப்பு வந்ததும், ரூ.35 லட்சத்துக்கான தொகையை, ஒப்பந்ததாரருக்கு, மாநகராட்சி கணக்குப் பிரிவினர் வழங்கியுள்ளனர். இது, கமிஷனரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது விசாரணையிலும் தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால், குற்றச்சாட்டு பதிவு செய்து, விளக்கம் கேட்க உத்தரவிட்டுள்ளார்.
'அழுத்தம் கொடுத்தது யார் விசாரணைக்கு உத்தரவு'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:சிற்றுண்டி வழங்கிய ஒப்பந்த நிறுவனத்துக்கு, எனது உத்தரவு பெறாமல், ரூ.35 லட்சம் வரை பணம் வழங்கப்பட்டு உள்ளது. உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. இரண்டு பில்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டு பதிவு செய்யச் சொல்லியுள்ளேன். கோப்புகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தியுள்ளேன். யாருடைய அழுத்தம் காரணமாக பணம் கொடுக்கப்பட்டது என்ற விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு, கமிஷனர் கூறினார்.