உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிப்படை வசதிகளுக்கு போராடும் மக்கள்! ரோட்டின் நிலையோ பரிதாபம்  குடிநீர் பற்றாக்குறையால் தவிப்பு  பெரியகோட்டை ஊராட்சியில் அவலம்

அடிப்படை வசதிகளுக்கு போராடும் மக்கள்! ரோட்டின் நிலையோ பரிதாபம்  குடிநீர் பற்றாக்குறையால் தவிப்பு  பெரியகோட்டை ஊராட்சியில் அவலம்

உடுமலை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட 5வது வார்டு பகுதிகளில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், தொடர்ந்து ஒதுக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகளில், பெரியகோட்டையும் ஒன்றாக உள்ளது.மேலும், நகராட்சியின் எல்லை பகுதியாகவும் இருப்பதால், குடியிருப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கான வசதிகள் எதும் மேம்படுத்தப்படுவதில்லை என, மக்கள் அதிருப்தியுடன் பேசினர்.இந்த ஊராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டில், ஆறுமுககவுண்டர் லே - அவுட் பகுதியில், 10 வீதிகள் உள்ளன. சராசரியாக இப்பகுதியில், 500 குடியிருப்புகள் உள்ளன.ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்றாண்டுகளை கடந்தும், எந்த ஒரு மாற்றமும் தங்கள் பகுதியில் இல்லை என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

ரோட்டை காணோம்

இப்பகுதியில் ரோடு குண்டும் குழியாகவும், புதிய ரோடு போடுவதற்கு பலமுறை விண்ணப்பித்தும் பலனில்லாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில், வாகன ஓட்டுநர்கள் மட்டுமில்லாமல், நடந்து செல்வோரும் குழிகளில் விழுந்து எழுந்து தான் செல்லும் அவலமாக உள்ளது.ரோட்டின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், விபத்துகளும் அதிகரிக்கிறது. அதில் கூடுதல் பிரச்னையாக பல வீடுகளும், ரோட்டை பார்க்கிங்காக மாற்றுவது, வீட்டு பொருட்களை போட்டு வைத்தும் பாதி ரோட்டை மறைத்து ஆக்கிரமித்துள்ளனர்.இதனால் மற்ற வாகனங்கள் செல்லும் போது இடையூறு ஏற்படுவது தொடர்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகம் எதுவும் செய்வதில்லை.

சுத்தமில்லாத குடிநீர் தொட்டி

இந்த வார்டில் மட்டுமே மொத்தமாக, இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. பல ஆண்டுகளாக அவை சுத்தம் செய்யப்படவில்லை. சுத்தமில்லாத குடிநீரை தொடர்ந்து அருந்த வேண்டிய நிலையால், அப்பகுதியில் குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது.டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுகளும் அப்பகுதியில் அதிகம் பரவிய பின்னரும், எந்த ஒரு துாய்மைப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

குடிநீர் வினியோகத்தில் குளறுபடி

திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, இந்த ஊராட்சிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிநீர் வினியோகம் தற்போது சீராக இல்லாமல், ஒரு மணி நேரத்திலிருந்து, அரைமணி நேரமாக குறைத்தும் விடப்படுகிறது.அதிகமான கால இடைவெளியில் விடப்படுவதால், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

குப்பைகிடங்காகும் காலி இடங்கள்

வீடுதோறும் குப்பைக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இருப்பினும், நகரப்பகுதிகளிலிருந்தும், அருகிலுள்ள குடியிருப்புகளிலிருந்தும் இங்குள்ள காலி இடங்களில் கழிவுகள் கொட்டப்படுகின்றன.மேலும் ஏற்கனவே ஆக்கிரமிப்பிலும், மோசமான நிலையிலும் இருக்கும் ரோடுகளின் ஓரத்தில் செடிகள் வளர்ந்து பொதுமக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோட்டை சீரமைப்பதற்கும், ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆறுமுககவுண்டர் லே அவுட் மக்கள் கூறியதாவது: அடிப்படையான எந்த ஒரு தேவைகளும், எங்கள் பகுதியில் செய்துதரப்படவில்லை. குடிநீர் தொட்டி சுத்தம் செய்வதற்கும், ரோடு போடுவதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை கேட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.மேம்பாட்டு பணிகளின் போது எங்கள் வார்டை மட்டுமே புறக்கணிக்கும் வகையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இதுதவிர, கூடுதலாக நாய்த்தொல்லையும், நாள்தோறும் மக்களை நிம்மதியாக ரோட்டில் நடக்க முடியாத வகையில் அச்சுறுத்துகிறது. அதையும் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடர்ந்து, இவ்வாறு அலட்சியமாக எங்கள் பகுதியை விடுவது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை