உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூத்த குடிமக்கள் குடியிருப்புகள் திடீர் அதிகரிப்பு: விதிகள் வகுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

மூத்த குடிமக்கள் குடியிருப்புகள் திடீர் அதிகரிப்பு: விதிகள் வகுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

- நமது நிருபர் -சென்னை, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில், மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக குடியிருப்புகள் கட்டுவது அதிகரித்துள்ளது. இதற்கென தனியாக விதிகள் வகுப்பது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஆய்வு செய்து வருகிறது.தமிழகத்தில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. மக்களின் வருவாய் நிலைக்கு ஏற்ப, கூடுதல் வசதிகளுடன் இக்குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.இதுபோன்ற குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்க, மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதை புரிந்து கொண்ட கட்டுமான நிறுவனங்கள், இவற்றில் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.சென்னை உள்ளிட்ட நகரங்களில், அடுக்குமாடி திட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கும் மக்கள், அதை வாடகைக்கு விடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், பொதுவான பிரிவில் கட்டப்படும் அடுக்குமாடி திட்டங்களில், தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். இந்நிலையில், இதற்கு தீர்வாக, மூத்த குடிமக்கள் மட்டும் வசிக்கும் வகையிலான அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் உருவாக துவங்கி உள்ளன. மக்களின் ஆர்வம் காரணமாக கட்டுமான நிறுவனங்கள் இது போன்ற குடியிருப்புகள் கட்டுவதை அதிரித்துள்ளன. இதுகுறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: சென்னை மட்டுமல்லாது, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களிலும், மூத்த குடிமக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. மகன், மகள்கள் வெளிநாடுகளில் குடியேறிய நிலையில், தனியே வசிக்கும் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பான இருப்பிடமாக இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முழுமையாக மூத்த குடிமக்கள் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதே போன்று கோவை, கும்பகோணம் நகரங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோவை, கும்பகோணம் பகுதிகளில், வில்லா வகையில் தனி வீடுகள் கட்டி விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் இவ்வகை வீடுகள் விற்பனை மட்டுமல்லாது, வாடகைக்கும் வழங்கப்படுகின்றன.பொதுவாக அடுக்குமாடி திட்டங்களை செயல்படுத் தும் போது, குறைந்த வருவாய் பிரிவினருக்கான குறைந்த பரப்பளவு வீடுகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்ட வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்ய, மூத்த குடிமக்களுக்கான வீடுகளை குறைந்த பரப்பளவில் கட்டுவதில், கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. அரசின் நிபந்தனையை பூர்த்தி செய்தது போன்று இருந்தாலும், வருவாயும் குறையாமல் கிடைத்து விடுகிறது. இந்த வளாகங்களில் உணவகம், மருத்துவ வசதி, ஆன்மிக சுற்றுலா ஏற்பாடுகள் கூடுதல் வசதியாக செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

'வசதிகள் இடம் பெற வேண்டும்'

இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள் கட்டி விற்பதில், எந்த கட்டுப்பாடும் இல்லை. இது போன்ற குறிப்பிட்ட நோக்கத்தில் கட்டி பராமரிக்கும் குடியிப்புகளில் வசிப்போர் குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அளிக்க வேண்டும்.அந்த குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். இதில், சம்பந்தப்பட்ட பிற துறைகளுடன் கலந்து பேசி, தேவையான புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ