| ADDED : பிப் 06, 2024 01:51 AM
கோவை;கோவையை தலைமையிடமாக கொண்ட, 'மைவி3 ஆட்ஸ்' என்ற நிறுவனம், ஆன்லைனில், விளம்பரங்கள் பார்த்து 'லைக்' போடுவது, பொருட்களை வாங்குவது வாயிலாக வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிறுவனம் மோசடியான முறையில், மக்களிடமிருந்து பணம் வசூலித்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இந்நிறுவனத்துக்கு ஆதரவாக கடந்த, 30ம் தேதி கோவை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளரான கோவை பீளமேட்டை சேர்ந்த சத்தியானந்த் உள்ளிட்டோர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்தனர்.விசாரணைக்காக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, கோவை மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் சத்தியானந்த் நேற்று ஆஜரானார். அவரிடம் போலீசார் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் சத்தியானந்த் கூறியதாவது:நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்தும் விசாரித்தனர். என்னிடம், 87 வகையான விற்பனை பொருட்கள் உள்ளன. அதுகுறித்த ஆவணங்கள், பொருட்களின் மாதிரிகளை சமர்ப்பித்துள்ளேன். போலீசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். மீண்டும் எப்போது அழைத்தாலும், நேரில் விளக்கம் அளிப்பேன். மோசடி செய்கிறேன் என்பதில் உண்மையில்லை. படித்தவர்கள்தான் என்னுடைய செயலியை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.