ஊர்ப்புற நுாலகர்கள் உண்ணாவிரதம்
கோவை, ;ஊர்ப்புற நுாலகங்களை தரம் உயர்த்தி, காலமுறை ஊதியம் வழங்க கோரி, அனைத்து ஊர்ப்புற நுாலகர்கள் சிவானந்தா காலனியில், கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இருந்தனர். ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பின் மாநில துணைச்செயலாளர் நாகராஜன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ், 1,915 ஊர்ப்புற நுாலகங்கள் செயல்படுகின்றன. இங்கு 1,006 ஊர்ப்புற நுாலகர்கள் 13 ஆண்டுகளாக சிறப்பு காலமுறை ஊதியத்தில், பதவி உயர்வு இல்லாமல், குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். ஊர்ப்புற நுாலகங்களை கிளை நுாலகங்களாக அரசு தரம் உயர்த்திட வேண்டும், கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அதை வரும் தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். தமிழக ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பு நிர்வாகிகள் ஸ்ரீதர், கலைச்செல்வன், ஆனந்தன் உள்ளிட்ட 500க்கு மேற்பட்ட நுாலகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.