| ADDED : மே 28, 2024 04:11 AM
பெண்ணாடம் : தீவளூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணியை விரைந்து துவக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த தீவளூரில் நுாறு ஆண்டுகள் பழமையான அஞ்சல்நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.நாளடைவில் பராமரிப்பின்றி கோவில் சுவர்களில் மரம், செடிகள் அதிகளவில் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு கோவில் சிதிலமடைந்தது. இதனால் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் திருவிழா நிறுத்தப்பட்டதால் பூஜை நடத்தப்படாமல் கோவில் பூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோவிலை புனரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2012ல் இந்து சமய அறநிலையத்துறை 12 லட்சத்து 54 ரூபாய் நிதி ஒதுக்கி, புனரமைப்பு பணிகள் துவங்கியது. ஆனால் கோபுரம் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் மட்டுமே புனரமைத்த நிலையில் மற்ற பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கோபுரம் மற்றும் சுவர்கள் மீண்டும் சிதிலமடையும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. கோவிலில் பிரதோஷம் மற்றும் வார, மாத பூஜைகள் நடக்கிறது.எனவே, கிடப்பில் போடப்பட்ட தீவளூர் அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணியை விரைந்து துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.