| ADDED : மே 02, 2024 11:22 PM
புவனகிரி: புவனகிரி அருகே சரியான நேரத்திற்கு வராததால், 108 ஆம்புலன்சை சிறைபிடித்து, டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.புவனகிரி அருகே சாத்தப்பாடியை சேர்ந்தவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அப்பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அழைத்துள்ளார். ஆனால், சரியான விலாசத்திற்கு செல்லாமல், இடம் மாறியதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் வந்தது. அதற்குள், உடல் நிலை சரியில்லாதவரை வேறு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறைபிடித்து, டிரைவர் சதீஷ்குமார், மருத்துவ உதவியாளர் கார்த்திகா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தகவலறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களை மீட்டு வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.பாதிக்கப்பட்ட டிரைவர் சதீஷ்குமார் கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.