உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டிற்குள் பெண் கொலை: துாக்கில் முதியவர் உடல் திட்டக்குடியில் பரபரப்பு

வீட்டிற்குள் பெண் கொலை: துாக்கில் முதியவர் உடல் திட்டக்குடியில் பரபரப்பு

திட்டக்குடி: வீட்டிற்குள் விதவைப் பெண் கொலை செய்யப்பட்டு, அருகிலேயே முதியவர் துாக்கில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெருமுளை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் இளையபெருமாள் மனைவி சின்னப்பொண்ணு,50; இவர்களுக்கு மணிகண்டன்,30; மணிமாறன், 27; ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி பெருமுளை கிராமத்தில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். கணவரை இழந்த சின்னபொண்ணு, கடந்த ஓராண்டாக வதிஷ்டபுரத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். மகன்கள் இருவரும் அவ்வப்போது வந்து தாயை பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். நேற்று காலை சின்னப்பொண்ணுவின் மூத்த மகன் மணிகண்டன்,30; தாயாருக்கு டீ வாங்கிக்கொண்டு சென்றார். வீட்டின் கேட் பூட்டியிருந்ததால் தாயை கூப்பிட்டு பார்த்தார். வெளியே வராததால், அவரிடம் இருந்த சாவியை கொண்டு கேட்டை திறந்து உள்ளே சென்றபோது, சின்னபொண்ணு, முதுகு மற்றும் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில், ஜன்னலில் 70 வயது முதியவர் துாக்கில் இறந்து கிடந்தார். தகவலறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பின்னர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில், சின்னப்பொண்ணு அருகே துாக்கில் இறந்து கிடந்தவர் பெரம்பலுார் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம்,70; என்பதும், தனியார் கல்வி நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்த இவர், வயது முதிர்வு காரணமாக 2 மாதமாக வேலைக்கு செல்லாதது தெரிய வந்தது. சின்னபொண்ணுவிற்கும், சதாசிவத்திற்கும் என்ன தொடர்பு, சின்னபொண்ணுவை சதாசிவம் கொலை செய்தாரா? அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை