| ADDED : ஜூலை 09, 2024 05:43 AM
மந்தாரக்குப்பம் : என்.எல்.சி., இரண்டாம் சுரங்க கன்வேயர் பெல்டில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி இறந்தார்.கடலுார் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த ஊமங்கலம் தெற்குவெள்ளுர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்,50; என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளி. இவர், நேற்று காலை 9:30 மணிக்கு இரண்டாம் சுரங்கம் டாப் பெஞ்ச்சில் நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட் பகுதியில் பணியில் இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கன்வேயர் பெல்ட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.அவரது உடலை மீட்டு, என்.எல்.சி., ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதனையறிந்த அன்பழகனின் உறவினர்கள் காலை 10:30 மணிக்கு என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயிலில் திரண்டு ஆம்புலன்சை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த என்.எல்.சி., அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அன்பழகன் குடும்பத்திற்கு உரிய நிவாரண தொகை மற்றும் வேலை வழங்குவதாக உறுதியளித்தனர். அதனையேற்று காலை 11:30 மணிக்கு உறவினர்கள் கலைந்து சென்ற பின், அன்பழகன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.இந்த விபத்து தொடர்பாக மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.