| ADDED : ஏப் 27, 2024 04:42 AM
கடலுார் : சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், வங்கி கணக்கு புத்தகங்கள், லாக்கர் சாவிகள் கைப்பற்றப்பட்டது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் கடந்த 24ம் தேதி மாலை 4:00 மணியளவில் கடலுார் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையில் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினர்.மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், 56; உள்ளாட்சி நிதி தணிக்கை குழு உதவி இயக்குனர் பூங்குழலி, 55; தணிக்கை குழு ஆய்வாளர் விஜயலட்சுமி, 43; ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்தனர்.இந்நிலையில், ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையில் நேற்று காலை 6:00 மணியளவில் வடலுாரில் உள்ள சீனிவாசன் வீட்டில் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் குழுவினர்; கடலுார் ஆனைக்குப்பத்தில் பூங்குழலி வீட்டில், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் குழுவினர்; திருவந்திபுரத்தில் விஜயலட்சுமி விட்டில், இன்ஸ்பெக்டர் அன்பழகன் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.மாலை 4:00 மணி வரை நடந்த சோதனையில், சீனிவாசன் வீட்டிலிருந்து 10 வங்கி கணக்கு புத்தகங்கள், 2 வங்கி லாக்கர் சாவிகள், பூங்குழலி வீட்டில் 12 வங்கி கணக்கு புத்தகங்கள், முக்கிய தகவல்கள் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மற்றும் விஜயலட்சுமி வீட்டில் 2 வங்கி கணக்கு புத்தகங்கள், 1 வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றை கைப்பற்றினர்.மேலும், 3 பேர் வீடுகளில் இருந்து அதிக மதிப்புடைய சொத்துக்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள், தங்க பத்திரங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.