| ADDED : மே 24, 2023 05:18 PM
கடலூர்: கடலூரில் முந்திரி விவசாயியின் மகள்கள் யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 2019ல் நடந்த தேர்வில் வெற்றி பெற்ற இளைய மகள் தற்போது சப் கலெக்டராக உள்ள நிலையில் தற்போது அவரது அக்கா சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்., ஆகி உள்ளார். இதனை அக்கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன்(முந்திரி விவசாயி). மனைவி இளவரசி. இவர்களுக்கு சுஷ்மிதா மற்றும் ஐஸ்வர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் ஐஸ்வர்யா, 2019ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில், வெற்றி பெற்றார். தமிழக அளவில் 2வது இடத்தையும், இந்தியஅளவில் 47 வது இடத்தையும் பிடித்த அவர், தற்போது பொன்னேரி சப் கலெக்டராக உள்ளார்.தங்கை போலவே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என சுஷ்மிதா (26) முயற்சி செய்து வந்தார். நேற்று வெளியிடப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில், அகில இந்திய தர வரிசையில் 528 வது இடத்தை பிடித்துள்ளார். கடுமையாக முயற்சி செய்த சுஷ்மிதா 6வது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா , தங்கை சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றதை அக்கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.