| ADDED : அக் 07, 2011 10:53 PM
சிறுபாக்கம்:மாற்றுப்பாதை சேதமடைந்ததால் விருத்தாசலம், சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் - சேலம் சாலையில் வி.கூட்ரோட்டிலிருந்து கடலூர் மாவட்ட எல்லையான அரசங்குடி வரை 16 கி.மீ., தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.அடரிக்கு அருகே இருந்த பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதனால் அருகிலேயே வாகன போக்குவரத்துக்காக தரையோடு தரையாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள் ளது. கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருவதால் காட்டுப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் இந்த பாதையை மூழ்கடித்து தண்ணீர் ஓடியது. தண்ணீர் வடிந்த நிலையில் மாற்றுப்பாதை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் தண்ணீர் மீண்டும் அதிகரிக்கத் துவங்கினால் சேலம், புதுச்சேரி, ஈரோடு, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலை துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுப் பாதை யை சீரமைக்க வேண்டும்.