உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடம் சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை: அவசரகால சிகிச்சைக்கு நடவடிக்கை தேவை

பெண்ணாடம் சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை: அவசரகால சிகிச்சைக்கு நடவடிக்கை தேவை

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் இயங்கிவரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் பெண்ணாடம் குறுவட்ட தலைமையிடமாகவும், தேர்வுநிலை பேரூராட்சியாகவும் உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெண்ணாடம் மற்றும் சுற்றுபுற பகுதி மக்களின் மருத்துவ வசதிக்காக, புதிய பஸ் நிலையம் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. இது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது, 5 டாக்டர்கள், 5 செவிலியர்கள், உதவியாளர் 6 பேர் பணிபுரிகின்றன. தினசரி 100 முதல் 200 பேர் வரையில், சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு வந்து செல்கின்றனர். மேலும், ஏழு படுக்கைகள் கொண்ட கர்ப்பிணிகள் வார்டு இங்கு இயங்கி வருகிறது.இங்கு, 24 மணி நேர பிரசவம், லேப் வசதி, குடும்ப கட்டுப்பாடு, அனைத்து வகை தடுப்பூசிகள், பள்ளி சிறார் திட்டம், கோவிட் உள்ளிட்டவைகளுக்கு ஊசி, மருந்து மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓமியோபதி சிகிச்சைக்கு தனியாக கட்டடம் உள்ளது. விஷக்கடிகளுக்கு அவசர சிகிச்சை, பல் மருத்துவம், பிசியோதெரபி மருத்துவம் பார்க்கப்படுகிறது. எக்ஸ்ரே, ஸ்கேன் வசதி உள்ளன.இதனால், சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப கட்டட வசதிகள் போதுமானதாக இல்லை. இங்கு, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் கசிந்து வருகிறது. இதன் காரணமாக நோயாளிகள் மட்டுமின்றி, மருத்துவம் பார்க்க முடியாத நிலையில் டாக்டர்களும் தவித்து வருகின்றனர். மேலும் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைகின்றனர்.விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில், பெண்ணாடம் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரியலுார் மாவட்டம், தளவாய், ஆலத்தியூர் பகுதிகளில் சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடுபவர்களை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தால், அவர்களுக்கு போதுமான உயர் சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை. முதலுதவி மட்டுமே அளித்து, மேல் சிகிச்சைக்காக திட்டக்குடி, விருத்தாசலம், கடலுார் அரசு மருத்துவமனைகள், விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பு வைக்கின்றனர். அவ்வாறு செல்லும்போது உயிருக்கு போராடுபவர்கள் நடுவழியில் உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது.எனவே, பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், விபத்து உள்ளிட்ட அவசரகால உயர் சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி