| ADDED : நவ 28, 2025 06:33 AM
கடலுார்: கடலுார் அருகே பஸ் நிற்கும் முன்பு கதவுகளை ஏன் திறந்தாய் என கூறி, அபராதம் விதித்ததால், பரிசோதகருடன், பஸ் டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுாரில் இருந்து விழுப்புரத்திற்கு நேற்று மதியம் 2:30 மணிக்கு, அரசு போக்குவரத்துக்கழக பஸ் புறப்பட்டது. டிரைவர் ராமதாஸ் ஓட்டிச்சென்றார். மாளிகைமேடு பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது, பயணிகள் இறங்குவதற்காக மூடப்பட்டிருந்த படிக்கட்டு கதவை டிரைவர் திறந்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், 'பஸ் இயங்கும்போது படிக்கட்டு கதவுகளை திறந்து வைத்திருப்பது தவறு, அதற்காக அபராதம்' விதிப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ராமதாஸ், 'பயணிகள் இறங்குவதற்காக பஸ் நிறுத்தம் அருகே வந்தபோதுதான் கதவுகளை திறந்தேன். அதற்காக அபராதம் விதிப்பது தவறு' என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பஸ்சிலிருந்த பயணிகள் சிலரும் பேசினர். சுமார் 30நிமிடங்களுக்கு மேலாகியும் டிக்கெட் பரிசோதகர், டிரைவரின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பயணிகளுக்கு காலதாமதம் ஆகிறது என டிரைவர் பஸ்சை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.