உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நெடுஞ்சாலைத்துறை அலட்சியம் வாய்க்காலை துார்வாராமல் கண்துடைப்பு

 நெடுஞ்சாலைத்துறை அலட்சியம் வாய்க்காலை துார்வாராமல் கண்துடைப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தேசிய நெடுஞ்சாலைக்கு பாசன வாய்க்காலை துார்வாருவதாக அதிகாரிகளின் கண்துடைப்பு பணிகள் கிராம மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை இடையே 47 கி.மீ., தொலைவிற்கு 200 கோடி ரூபாயில், மாநில சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக, மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, பாலங்கள் அகலப்படுத்தும் பணிகள் நடந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த இப்பணியின்போது, விருத்தாசலம் அடுத்த கார்குடல், கம்மாபுரம் பகுதிகளில் பாசன வாய்க்கால்களை துார்வாராமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும், அப்பகுதியில் வாய்க்காலை மறைத்து, பயணிகள் நிழற்குடை, கடைகளின் முகப்பில் சாலைகள் போடப்பட்டு விட்டன. சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பாசன வாய்க்கால் இல்லாது மழைநீர் முழுவதுமாக கார்குடல் கிராமத்திற்குள் நுழைந்து, விளைநிலங்கள், குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களாக மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி, பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் நேற்று விரிவாக செய்தி வெளியானது. இந்நிலையில், வாய்க்காலில் கட்டிய நிழற்குடையில் இருந்து 30 மீட்டர் தொலைவிற்கு வாய்க்காலை துார்வாறுவதுபோல கண்துடைப்பு பணிகள் மட்டும் நடந்தன. இதனால் கார்குடல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்கள், விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை