அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செக்காம்பட்டியை சேர்ந்தவர் அழகுமணி, 40; தொழிலாளி. இவர், கடந்தாண்டு மே மாதம் அரூர் - தீர்த்தமலை சாலையில், மாம்பாடி பெருமாள் கோவில் அருகே பைக்கில் சென்ற போது, எதிரே வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். அஅவருக்கு, வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, மண்ணீரல் அகற்றப்பட்டது. அரூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்நிலையில், முதல்வரின் விபத்து நிவாரண நிதி பெற, பல மாதங்களாக அழகுமணி, அரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, விபத்து வழக்கு குறித்த ஆவணங்கள் கேட்ட போதெல்லாம், 'பிறகு வா' எனக்கூறி போலீசார் அவரை திருப்பி அனுப்பி வந்தனர். நேற்று காலை, 11:30 மணிக்கு அழகுமணி, மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் சென்று ஆவணம் கேட்டபோது, போலீசார் வழங்காததால் ஆத்திரமடைந்த அவர், ஸ்டேஷன் வளாக கேட்டை இழுத்து மூடினார். அவர் கூறுகையில், ''முதல்வரின் விபத்து நிவாரண நிதி பெற, ஓராண்டுக்கு மேல், விபத்து தொடர்பான ஆவணங்கள் கேட்டு வருகிறேன். 'அது தொலைந்து விட்டது; தேடி எடுத்து தருகிறோம்' என, மரியாதை குறைவான வார்த்தைகளால் மிரட்டும் தோரணையில் போலீசார் பதிலளிக்கின்றனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானேன். ஒரு முடிவு தெரிய வேண்டும் என்பதற்காக, போலீஸ் ஸ்டேஷன் கேட்டை இழுத்து மூடினேன்,'' என்றார்.இதையடுத்து, அழகுமணியை ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.