உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கடும் வறட்சியிலும் பேரிச்சை சாகுபடி: விவசாயி அசத்தல்

கடும் வறட்சியிலும் பேரிச்சை சாகுபடி: விவசாயி அசத்தல்

தர்மபுரி: தர்மபுரி அருகே அரியாகுளத்தில், பேரிச்சை சாகுபடி செய்த விவசாயிக்கு, கடும் வறட்சியிலும் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது.ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டும் விளைவிக்கப்படும் பேரிச்சையை, தர்மபுரி மாவட்டம் அரியாகுளத்தில் நிஜாமுதீன், 67, என்ற விவசாயி பயிரிட்டு, கடும் வறட்சியிலும் அமோக விளைச்சலை பெற்றுள்ளார். சவுதி அரேபியாவில் பேரிச்சை பண்ணையில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பேரிச்சை கன்றுகளை இறக்குமதி செய்து, தன் நிலத்தில் பயிரிட்டார். சில ஆண்டுகளில் நல்ல விளைச்சலை கிடைத்ததால் தொடர்ந்து, அவருடைய நிலத்தில், 15 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கிறார். அதில், பர்ரி, கான்ஜி, நுார் போன்ற திசு வளர்ப்பு செடி, தர்மபுரியின் கடும் வறட்சியை தாங்கி நல்ல விளைச்சலை தந்துள்ளது.இது குறித்து, விவசாயி நிஜாமுதீன் கூறியதாவது: பேரிச்சை விவசாயம், விவசாயிகளுக்கு நல்ல வரப்பிரசாதம். இதை பயிரிட்டால், 3 ஆண்டுகளில் நல்ல மகசூல் பெற்று நல்ல லாபம் கிடைக்கும். பேரிச்சை விவசாயம் வேலையாட்கள், தண்ணீர் பிரச்னை இல்லாத ஒரு பணப்பயிர். ஒரு கிலோ பேரிச்சையை, 150 முதல், 200 ரூபாய் வரை மொத்த வியாபாரிகள், பண்ணைக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.இந்த மரங்கள், 90 ஆண்டுகள் வரை காய்க்கும் தன்மை கொண்டது. மற்ற விவசாயிகளும் பேரிச்சை சாகுபடி செய்ய, தோட்டத்தில் வளர்த்த கன்றுகளை அவர்களுக்கு வழங்கி வருகிறேன். பேரிச்சை சாகுபடியை ஊக்கப்படுத்த, தமிழக அரசு மானியத்தை அதிகப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை