தர்மபுரி: தனியார் மருத்துவமனையில், தவறான சிகிச்சையால் பாதித்து, கோமா நிலையில் இருந்த, நர்சிங் மாணவி உயிரிழந்தார்.தர்மபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அடுத்த லாலாகொட்டாயை சேர்ந்த விவசாயி தங்கராஜ் மகள் காயத்ரி, 18; இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி., நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த மார்ச், 18 அன்று உடல்நிலை பாதிப்பால், தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்த பின் மார்ச், 20 அன்று ஊசி போட்டபோது மயக்கம் ஏற்பட்டது. இதனால் மருத்துவர் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பினார். அங்கு மார்ச், 23 அன்று சுயநினைவின்றி இருப்பதால், வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.ஆனால் காயத்திரியின் பெற்றோர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து, காயத்ரியின் இந்த நிலைக்கு காரணமான, தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க, தர்மபுரி டவுன் போலீஸ் மற்றும் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., காயத்ரியிடம் மனு அளித்தனர். அதன்படி மருத்துவமனையில், ஆய்வு செய்து சிறப்பு மருத்துவர் கொண்டு சிகிச்சையளிக்க, மருத்துவமனை நிர்வாகத்திடம், ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி தலைமையில் குழுவினர் சம்மந்தபட்ட தனியார் மருத்துவமனையில், மார்ச், 25 ல் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், நோயாளிக்கு சிகிச்சை அளித்தபோது, பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்துகளை தர ஆய்வுக்கு அனுப்பினர். மருத்துவக் குழுவினரின் விசாரணை அறிக்கை, விரைவில் உயர் அதிகாரிகள் பார்வைக்கு, அனுப்பி வைக்கப்படும் என, தர்மபுரி கலெக்டர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில், 12 நாட்கள் சிகிச்சையில் இருந்த காயத்ரி, நேற்று அதிகாலை உயிரிழந்தார்.