| ADDED : ஜூன் 07, 2024 12:19 AM
தர்மபுரி : தர்மபுரியில் நடந்த, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் சாந்தி பேசியதாவது:தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை அனைத்து துறை அலுவலர்கள் கட்டாயம் அறிந்து, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகளின் விவரப்பட்டியல், அவசரகால போக்குவரத்து வழித்தடங்கள், போக்குவரத்து ஊர்திகளின் விபரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.மேலும் நீர் நிலைகள், தற்போதுள்ள நீரின் அளவு குறித்து விவரப்பட்டியல் தயாராக வைத்திருக்க வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் மக்களை தங்க வைக்க சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் ஆகியவற்றை பராமரித்து வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான தண்ணீர் டேங்க், ஜெனரேட்டர்கள், டார்ச் லைட், உணவு சமைக்க பாத்திரம் மற்றும் காஸ் அடுப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும்.சாலையோர மரங்கள் சேதமடைந்தால், மீட்பு பணிக்கான புல்டோசர், மரம் வெட்டும் இயந்திரம் ஆகியவற்றை முறையாக பராமரித்து வைக்க வேண்டும். அவரச தேவை, பேரிடர் கால வீடு, கால்நடை, மனித உயிரிழப்பு, போக்குவரத்து பாதிப்பு பற்றிய தகவல்களை தெரிவிக்க, கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ள தங்கள் பகுதி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.