| ADDED : ஜூன் 20, 2024 05:39 AM
பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் 'போஸ்டர்' அடித்து விளம்பரப்படுத்தி கொள்ளும் கலாசாரம் பெருகி விட்டது. சாலையில் நடந்து செல்லும்போது திரும்பும் திசையெல்லாம் பிறந்தநாள் விழா, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு , திருமணம், கண்ணீர் அஞ்சலி, அரசியல், சினிமா விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை மையப்படுத்தி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அந்த வகையில் பொது சொத்துக்களை சிதைப்பதை பலரும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.ரோட்டோராமாக இருக்கும் மின்பெட்டிகளும் போஸ்டர்களின் அடுத்த குறியாக உள்ளது. இதை விளம்பரம் செய்வதற்காக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைபோல் பயன்படுத்துகின்றனர். இதனால் மின் பெட்டியில் பழுது நீக்க வரும் மின் ஊழியர்கள் மின் பெட்டிகளின் கதவை திறப்பதற்கு போஸ்டர்களை அகற்றுவதற்குள் போதுமென ஆகிவிடுகிறார்கள். பொது சொத்துக்கள் , பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதால் அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கின்றன. குறிப்பாக அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் கணக்கில்லாமல் போகிறது. அரசியல் தலைவரின் பிறந்தநாள், சிறு பதவி பெற்றால் கூட தெருபலகை, ஊர் பலகை தொடங்கி ஒரு இடம் விடாமல் போஸ்டர்களை ஒட்டுவது தொடர்கிறது. வெளியூர்களிலிருந்து வருவோர் இந்த பகுதிதான் என்பதை காண முடியாத அளவிற்கு முகவரியை மறைத்து விடுகின்றனர்.சுவரில் விளம்பரம் செய்யவோ கூடாது என எழுதப்பட்ட எச்சரிக்கை வாசகத்தின் அருகிலே போஸ்டர்களை வளைத்து ஒட்டுவது இயல்பாக நடைபெறுகிறது. இது போன்று ஒட்டப்படும் போஸ்டர்களில் அச்சகங்களில் பெயர்களும் இருப்பதில்லை. இதனை கண்டுபிடிப்பதே பெரும் வேலையாக இருக்கிறது. துறை அதிகாரிகள் அச்சகங்களில் இது குறித்த விவரங்களை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு தொடர் கண்காணிப்பும் அவசியமாகிறது.