| ADDED : ஜூலை 31, 2024 04:22 AM
திண்டுக்கல் : 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரோடுகள் இல்லை, சாக்கடை இல்லாமல் ரோடுகளில் தேங்கும் கழிவுநீர், வடிகால் இன்றி மழை நேரங்களில் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்,எங்கும் தெரு நாய்கள், கொசுக்கள்,தெரு விளக்குகள் இல்லாததால் சமூக விரோத செயல்கள் என ஏராளமான பிரச்னைகளுடன் திண்டுக்கல் பகவான் ஸ்ரீ சேஷாத்திரி நகர் குடியிருப்போர் பாதிக்கின்றனர்.திண்டுக்கல் மாலப்பட்டி ரோடு பகவான் ஸ்ரீ சேஷாத்திரி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜாகிர்,செயலாளர் பிரபாத்,பொருளாளர் சஞ்சய்,நிர்வாகிகள் விமலா,ஸ்டெல்லா மேரி கூறியதாவது: எங்கள் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ரோடுகள் அமைக்கவில்லை. களிமண் ரோடுகளாக உள்ள நிலையில் மழை நேரங்களில் சகதியில் தடுமாறி விழுகின்றனர். டூவீலர்களில் செல்வோரும் தவிக்கின்றனர். பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர் இதுவரை சிமென்ட்,தார் ரோடுகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவசர தேவைக்கு கூட இங்குள்ள மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்குகின்றனர். இங்குள்ள தெருக்களில் ஒரு இடத்தில் கூட தெரு விளக்குகள் இல்லாமல் . இரவில் மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். இதுமட்டுமில்லாமல் சிலர் மது குடிப்பது,திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் கேட்டால் தகராறு தான் ஏற்படுகிறது. போலீஸ் ஸ்டேஷன்களிலும் இதுகுறித்து பல்வேறு புகார்களை கொடுத்து விட்டோம் அவர்களும் எப்போதாவது ஓருமுறை வந்து ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். மற்ற நேரங்களில் வருவதே இல்லை. எங்கு பார்த்தாலும் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் மக்களை கண்டாலே நாய்கள் துரத்துகின்றன. சில நேரங்களில் வெறி பிடித்து கடிக்கின்றன. ஊராட்சியில் புகார் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். மழை நேரங்களில் மழைநீர்,கழிவுநீர் செல்ல வடிகால், சாக்கடை இல்லாமல் ரோடுகளில் மழைநீர் தேங்கி மக்களை பாடாய்படுத்துகிறது. ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகத்தின் செட்டிக்குளத்திலே கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மழை நேரங்களில் குப்பை கழிவுநீரில் மிதந்து வீடுகளுக்குள் வருகிறது. இரவில் மட்டுமில்லாமல் பகல் நேரங்களிலும் வெளியில் வரமுடியாத அளவிற்கு கொசுக்கள் கடித்து துன்புறுத்துகின்றன. கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை. மாடுகளும் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. பாம்புகளும் அதிகளவில் வீட்டிற்குள் வருகிறது. இதனால் மக்கள் அச்சத்துடனே உள்ளனர். இங்கு குற்ற செயல்களை தடுக்க போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் என்றனர்.