உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் பொசுவன் குளம்

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் பொசுவன் குளம்

குஜிலியம்பாறை: வடுகம்பாடி ஊராட்சி சீலமநாயக்கன் களத்துார் அருகே உள்ள பொசவன் குளத்தில் கருவேலன் முட்கள் நிறைந்து காணப்படுவதால் இதனை அகற்றி குளத்தை முறையாக துார்வார ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.வடுகம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் இருந்து கூம்பூர் செல்லும் ரோட்டில் சீலமநாயக்கன் களத்துார் அருகே பொசவன் குளம் குளம் உள்ளது. 20 ஏக்கரில் உள்ள இந்த குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதி விவசாய கிணறுகள் , போர்வெல்களில் நீர் பிடிப்பு ஏற்படும். இந்த குலத்திற்கு வரும் சிற்றோடை , குளம் கருவேல முட்களால் சூழப்பட்டு குளம் பச்சை போர்வை போர்த்தியது போல் உள்ளது.கிராமப் பகுதி ரோட்டோரங்கள், வாய்க்கால்கள், குளத்துப் பகுதி என ஏங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த கருவேல முட்களால் பொது மக்களுக்கோ, கால்நடைகளுக்கோ, எந்த பிரயோஜனமும் இல்லாத நிலையில் எழுச்சியாக வளர்கிறது. இந்தமரங்கள் குளத்துப் பகுதி மட்டுமின்றி கிராம பகுதிகளில் ரோட்டோரம் , வீடு ஓரப்பகுதிகளில் வளர்ந்துள்ளது. இதனை முற்றிலுமாக அகற்ற உள்ளாட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.ஒருமுறை அகற்றி விட்டாலும் மீண்டும் வளரும் என்பதால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ,வருடம் ஒரு முறையாவது சுத்தமாக அகற்றி வந்தால் மட்டுமே 5 அல்லது 10 ஆண்டுகளில் முற்றிலும் அகற்ற முடியும். திண்டுக்கல் மாவட்டத்தில் இதற்கான தனி கூட்டங்களை நடத்தி மாவட்டத்தில் கருவேலமரங்களே இல்லை எனும் நிலையை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும்.

காலம் காலமாக உள்ளது

ப.திருமுருகன், தே.மு.தி.க., மாவட்ட பொருளாளர், புளியம்பட்டி:மக்களுக்கு பயன்படாத இந்த கருவேல மரங்கள் காலம் காலமாக உள்ளது. ஒரு காலத்தில் விறகு அடுப்பு பயன்பாட்டிற்காக விதை தூவப்பட்டதாக கூறுவர். தற்போது காலம் மாறிவிட்டது. அனைத்து வீடுகளிலும் கியாஸ் இணைப்புகள் வந்துவிட்டன. தற்போது விறகுக்காக கூட இந்த முட்களை வெட்டாததால் நன்கு செழித்து வளர்கின்றன. ஒரு குளத்தில் மட்டும் இதை அகற்றுவதால் பயன் தராது. மீண்டும் முளைக்கும் தன்மை உடைய நிலத்தடி நீரை உறிஞ்சும் இவற்றை மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு வேரோடு அழிக்க வேண்டும். 6 மாதம், ஒரு வருடத்திற்கு ஒரு முறை அழிக்க வேண்டும். ஒட்டுமொத்த கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

மீண்டும் வளர்கிறது

பொ.ரங்கசாமி, அ.தி.மு.க., கிளை செயலாளர், சீலமநாயக்கர் களத்துார்: குளத்துப் பகுதி முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து கிடப்பதால் இப்பகுதி மக்கள் செம்மறி ஆடுகளை கூட மேய்க்க முடியவில்லை. ஆடுகள் குளத்துக்குள் போனால் மீண்டும் அதை வீட்டுக்கு ஓட்டி வருவதில் சிரமம் உள்ளது. அந்த அளவிற்கு கருவேல மரங்கள் நிறைந்து கிடக்கின்றன. இதனை ஒட்டுமொத்தமாக அகற்றினாலும் மீண்டும் வளர்ந்து விடுகிறது. கருவேல மரங்களை அகற்றி குளத்தை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் கிராம மக்களின் வாழ்க்கை ,ஆடு, மாடு வளர்ப்பு தொழில் சிறப்படையும் .

கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன

ஆர்.ரமேஷ், ஓட்டுனர், புளியம்பட்டி: பொசுவன்குளம் மட்டுமின்றி பெரும்பாலான இடங்களில் கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றை அழிக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஒட்டுமொத்த கிராம மக்களும் தன்னார்வ எழுச்சியுடன் கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே கருவேல மரங்களை ஒழிக்க முடியும். அதுவும் ஒரு முறை அழித்தால் போதாது. மீண்டும் மீண்டும் தொடர் முயற்சி செய்ய வேண்டும். ஒரு ஊராட்சி 100 சதவீதம் கருவேல மரங்கள் இல்லாத ஊராட்சி என்ற பெயரை வாங்கினால் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி தான். வடுகம்பாடி ஊராட்சி தலைவர் சேகர் கூறுகையில்,'' பொசவன்குளத்தில் கருவேல மரங்கள் நிறைந்து இருப்பதால் ,100 நாள் வேலை திட்ட பணியாளர்களைக் கொண்டு குளத்தை சுத்தம் செய்ய முயற்சி எடுக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி