| ADDED : ஆக 01, 2024 05:25 AM
திண்டுக்கல்: நத்தம் சின்னையம்பட்டியில் 6 வயது சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள், விளாம்பட்டி பகுதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் என இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நத்தம் கோட்டையூர் சின்னையம்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி அஜய் ரத்தினம் 22. இவரது உறவினர் வித்யா. இணையதளத்தில் வெளியான ஒரு படம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் வித்யா புகாரளித்தார். அந்த புகைப்படத்தை பதிவிட்டது அஜய்ரத்தினம் என தெரிந்ததால் வித்யா வழக்கை வாபஸ் பெற்றார்.இருப்பினும் வித்யா மீது அஜய்ரத்தினம் ஆத்திரத்தில் இருந்தார். 2021ல் வித்யாவின் 6வயது மகனை மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்ற அஜய்ரத்தினம் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக ஜோதி ஆஜரானார். அஜய் ரத்தினத்திற்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். பாலியல் தொல்லை
திண்டுக்கல்: வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவநாதன் 22. 2023ல் திண்டுக்கல் விளாம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். விளாம்பட்டி போலீசார் சிவநாதனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார். விசாரித்த நீதிபதி வேல்முருகன்,குற்றவாளி சிவநாதனிற்கு ஆயுள் தண்டனை,ரூ. 3,10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.