உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலங்கலான தண்ணீர்: கழிவுகள் குவியும் மயானம்; கதறும் சின்னாளபட்டி மக்கள்

கலங்கலான தண்ணீர்: கழிவுகள் குவியும் மயானம்; கதறும் சின்னாளபட்டி மக்கள்

சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் கலங்கலான குடிநீர் வினியோகம், அள்ளப்படாத குப்பை,வசதிகளற்ற மயானங்களில் குவிக்கப்படும் கழிவுகள் போன்ற பிரச்னைகளால் இப்பகுதியினர் அவதிப்பட்டு வருகின்றனர்.சின்னாளபட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க பகுதி ,நிலக்கோட்டை பேரணி பகுதி ஆகிய இடங்களில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள 3 மேல்நிலை தொட்டிகளில் இருந்து வார்டு வாரியாக தண்ணீர் வினியோகம் நடக்கிறது. பெரும்பாலான வார்டுகளில் அவ்வப்போது கலங்கலான தண்ணீர் வினியோகிக்கப்படுவது வாடிக்கையாக தொடர்கிறது. இவற்றுக்கான பராமரிப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம் நீடிக்கிறது. 2023ல் ஆய்வுக்கு வந்த பேரூராட்சிகள் இயக்குனர், ஆத்துார் பகுதி பம்பிங் கிணற்றில் மூடி அமைத்து சுகாதாரம் பராமரிக்க அறிவுறுத்தினார். ரூ. 13.52 லட்சம் நிதி ஒதுக்கி பல மாதங்களாகியும் இதற்கான பணியில் சுணக்கம் நீடிக்கிறது.வி.எம்.எஸ் காலனி, திண்டுக்கல் பைபாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் மயானங்கள் உள்ளன. இவற்றில் பாலிதீன் கழிவுகளை குவித்து எரிப்பது, தொடரும் அடர் புகை மண்டலம், தொற்று பரவல் போன்ற சுகாதாரக்கேடுகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். அடுத்தடுத்து குவிக்கப்படும் பாலிதீன் கழிவுகள் நச்சாக மாறி இப்பகுதியில் தொற்று அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. புதர் மண்டிய நிலையில் விஷ பூச்சிகளின் நடமாட்டம், சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் இப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளன. மாவட்ட நிர்வாகம்தான் இவற்றிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மாசு கலந்த தண்ணீர்

ராஜ்குமார், பா.ஜ., மண்டல் பொதுச்செயலாளர், சின்னாளபட்டி : பல வார்டுகளில் 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் நடக்கிறது. 30 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே வழங்குவதால் பெரும்பாலான குடும்பங்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. அவ்வப்போது மாசு கலந்த நிலையில் தண்ணீர் வருகிறது. சில நேரங்களில் செம்மண் கரைத்த கூழ் போன்று தண்ணீர் வருவதால் சுகாதாரம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

விஷ ஈ, கொசு உற்பத்தி ஜோர்

ஜெயராமன் ,கூலித்தொழிலாளி, சின்னாளபட்டி : திடக்கழிவு மேலாண்மையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். அஞ்சுகம் காலனி உரக்கிடங்கிற்கு பெரும்பாலான பகுதிகளில் சேகரமாகும் கழிவுகள் கொண்டு செல்லப்படுவதில்லை. துப்புரவு ஆய்வாளர் பணியிடத்தை குறைத்துள்ள சூழலில் தொய்வு அதிகரித்துள்ளது. வள்ளலார் நகர் கழுத்து மாரியம்மன் கோயில் தெருவில் குப்பை குவிக்கின்றனர். ரோட்டோரங்களில் குவித்து எரியூட்டுகின்றனர்.விஷ ஈ, கொசு உற்பத்தி அதிகரிப்பு தாராளமாகி விட்டது.

கண்காணிப்பு இல்லை

நாகஜோதி ,குடும்பத் தலைவி, திரு.வி.க. நகர் : வி.எம்.எஸ் காலனி, திண்டுக்கல் பைபாஸ் ரோடு உள்ளிட்ட மயானங்களில் பாலிதீன் கழிவுகளை குவித்து எரிப்பது, தொடரும் அடர் புகை மண்டலம், தொற்று பரவல் போன்ற சுகாதாரக்கேடுகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். கால்நடைகள் பாலிதீன் கழிவுகளை உண்பதால் உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது. அதிகாரிகள் அலட்சியத்தால் தண்ணீர் வினியோக குளறு படிகளுக்கு தீர்வு கிடைக்க வில்லை. மாசு கலந்த தண்ணீர் வினியோகத்தால் குழந்தைகளை பராமரிப்பதில் பிரச்னைகள் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ