வேடசந்தூர் : இடநெருக்கடியில் தவிக்கும் வேடசந்தூர் அரசு மகளிர் பள்ளிக்கு மாற்று இடம் ஒதுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இப்பள்ளி 1966 ல் தொடங்கப்பட்டடு, 2006 ல் மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 1,840 மாணவி, 43 ஆசிரியர்கள் உள்ளனர். போதிய இடம் இன்றி காலையில் இறை வணக்கமே நடப்பதில்லை. இது குறித்து, 'தினமலர்' இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இக்குறைபாடு குறித்து பழனிச்சாமி எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் முறையிட்டார். இதை தொடர்ந்து கலெக்டர் நாகராஜன், ஆய்வு செய்தார். ஒவ்வொரு வகுப்பிலும் 60 க்கும் மேற்பட்ட மாணவிகள் நெருக்கடியில் அமர்ந்திருந்தனர்.
தூர்து போன வீரணன் குளத்தில், பள்ளிக்கு இடம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இதனால் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற உத்தரவிட்டார். எம்.எல்.ஏ., - ஆர்.டி.ஓ., வேலுச்சாமி, பிற்பட்டோர் நல அலுவலர் முகமது ஐதர் அலி, முதன்மை கல்வி அதிகாரி அசோகன், தாசில்தார் மலைச்சாமி உடன் இருந்தனர்.
ஆக்கிரமித்த நிலம் மீட்பு: வேடசந்தூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக, அரசுக்கு சொந்தமான வீரணன்குளம் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். எல்லைகளை சரிபார்த்தபோது அருகில், அரசு சொந்தமான நிலம் 30 சென்ட் இடத்தை ராமலிங்க நகர் என்ற பெயரில் வீட்டுமனைகள் விற்பனை செய்வதற்காக ஆக்கிரமித்தது தெரிந்தது. இந்த இடத்தின் மதிப்பு 50 லட்ச ரூபாய். ஆக்கிரமிப்பு நிலத்தை உடனடியாக அகற்ற தாசில்தார் மலைச்சாமிக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.