| ADDED : ஜன 02, 2026 06:01 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஏழு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் நுாலாம்படை படர்ந்து பாழடைந்த நிலையில் நகராமல் நிற்கும் நடமாடும் வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தொடக்கல்வி இயக்குனரகம் சார்பில் 2009ல் மாநிலம் முழுவதும் 15 வாகனங்கள் வழங்கப்பட்டன. இதில் தொலைக்காட்சி, புரொக்ஜெக்டர், ஒலி பெருக்கி, அறிவியல் செய்முறை மாதிரி உபகரணங்களுடன் வழங்கப்பட்டன. தற்போது இந்த வாகனம் 7 ஆண்டுகளாக பயன்படுத்தாது அலுவலக வளாகத்தில் காட்சிப் பொருளாக, நுாலாம்படை படர்ந்து கேட்பாரற்ற நிலையில் உள்ளது. இதன் மூலம் அரசு பணமும் வீணடிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் வந்து செல்லும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட யாரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் நடமாடும் கலந்தாய்வு வாகனம் நகராமல் உள்ளது. இனியாவது இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர முதன்மை கல்வி அலுவலர் உஷா, கலெக்டர் சரவணன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.